அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழுநீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு இரத்தசோகையை தடுத்து, நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

Update: 2022-03-12 06:54 GMT

கலெக்டர் ரமண சரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் (National Deworming Day - 2022) வழங்கும் முகாம் 14.03.2022 முதல் 19.03.2022 (திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை) வரையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி  மையங்களில் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட நாட்களில் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 21.03.2022 அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட முகாமில் 1 வயது முதல் 19 வயது வரையிலான மொத்தம் 51,272 அங்கன்வாடி குழந்தைகள், 25,636 கல்லூரி மாணவர்கள்,  1,51,946 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 2,28,854 குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் 65,419 மகளிர் (20 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் 120 மற்றும் 251 மருத்துவப்பணியாளர்கள் மற்றும் 714 அங்கன்வாடிப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய உள்ளார்கள்.

1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 mg (1/2 மாத்திரை) 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்களுக்கு  400 mg  (முழு மாத்திரை) மற்றும் மகளிர் 400 mg (முழு மாத்திரை) வழங்கப்பட உள்ளது. குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

இம்மாவட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், பள்ளி நிர்வாக குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரையின் பயன் பற்றியும், மாத்திரைகள் கொடுக்கப்படும் நாள் பற்றியும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எடுத்துக் கூறுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News