அரியலூர் நகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டம்-கலெக்டர் தகவல்

அரியலூர் நகராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவேற்றப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-13 05:57 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நமக்கு நாமே திட்டம் மூலம் அரியலூர் நகராட்சி பகுதிகளில் நீர்நிலை புனரமைத்தல், பூங்கா மற்றும் விளையாட்டு திடல் மேம்பாடு செய்தல், தெருவிளக்கு, நீரூற்றுகள் மற்றும் போக்குவரத்து ரவுண்டானா அமைத்தல், மின் சிக்கன தெருவிளக்குகள் அமைத்தல், தேவையான இடங்களில் சூரிய சக்தி உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் ஏதாவது ஒரு பணியை தேர்வு செய்து அதன் விவரத்தை நகராட்சி ஆணையருக்கு கடிதம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பணி நகராட்சி மூலம் பரிசீலனை செய்து மதிப்பீடுகள் தயார் செய்து மதிப்பீட்டுத்தொகை விவரங்கள் தெரிவிக்கப்படும். மதிப்பீட்டு தொகையில் பொது மக்களால் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பு செலுத்தப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் உரிய அனுமதி பெற்று நகராட்சியால் பணி மேற்கொள்ளப்படும். மதிப்பீட்டு தொகையில் 50 சதவீத தொகை பொது மக்கள் பங்களிப்பாக செலுத்தப்பட்டால் பங்களிப்புதாரர் மூலமாகவே பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள் பங்களிப்பு தொகை Commissioner, Ariyalur Municipality Namakku Naame Thittam Account (urban) Public Contribution Fund என்ற பெயரில் வரைவோலையாகவோ அல்லது ஐசிஐசிஐ வங்கி, அரியலூர் கணக்கு எண் : 080601004467, IFSC Code : ICIC0000806, Branch Code – 0806-லும் வங்கி பணமாற்றம் முறையில் செலுத்தலாம்.

பங்களிப்பு செலுத்தப்பட்ட நாளிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். தங்கள் பகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இத்திட்டத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News