திருமானூர் பகுதியில் நல்லேர் பூட்டிய விவசாயிகள் வழிபாடு
அரியலூர் மாவட்டம் அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் டிராக்டர்கள் கொண்டு நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள், தங்கள் வயலில் விவசாயப் பணிகளைத் தொடங்கும் முன், நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தொடங்குவார்கள். அதற்காக ஒவ்வொரு ஆண்டின் தமிழ் வருட பிறப்பான சித்திரை மாதம் முதல் நாள் தங்களது வயல்களில் விவசாயிகள் நல்ல நேரம் பார்த்து நல்லேர் பூட்டி வயலை உழுது கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழ் வருட பிறப்பான இன்று அரியலூர் மாவட்டம் திருமானூர், காரைப்பாக்கம், மஞ்சமேடு, அரண்மனைக்குறிச்சி, பாளையப்பாடி,சேனாபதி உட்பட பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் தங்களது வயல்களில் நல்லேர் பூட்டினர். தொடர்ந்து, ஏர்கலப்பை மற்றும் காளைகளை விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினரும் வணங்கி வழிபட்டனர். தொடர்ந்து கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று அனைவரும் சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தற்போது உழவு பணிகளில் அதிகளவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் டிராக்டர்,ஜேசிபி இயந்திரங்களையும் கொண்டு நல்லேர் பூட்டி வழிபட்டனர்.