அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.எஸ். சிவசங்கர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் சிவசங்கர் தனது 'ட்விட்டர்' கணக்கில் பதிவிட்டு உள்ளார்.
அதில் உடல் சோர்வு, சளி,காய்ச்சலை தொடர்ந்து கடும் தொண்டை வலி ஏற்பட்டதால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டடேன். இதில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொண்டை வலி காரணமாக பேச இயலாததால் அலைபேசியை அணைத்து வைத்துள்ளேன்.சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் முன்பாதுகாப்பாக இருக்கவேண்டுகிறேன் என கூறப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதோடு மருத்துவர்களின் ஆலோசனை படி உரிய சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் சிவசங்கருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இரண்டாவது முறையாகும். கடந்த 2021ம் ஆண்டு மே 9ந்தேதி இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திய நிலையில் அமைச்சர் சிவசங்கருக்கு தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதற்கு அவர் கடந்த சில நாட்களாக இடைவிடாது பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றது காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.