மருதையாற்றில் பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

ஆதனூரில் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றில் பாலம் கட்டும் பணியை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

Update: 2022-07-15 12:30 GMT
மருதையாற்றில் பாலம் கட்டுமான பணியை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர்-மழவராயநல்லூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மருதையாற்றின் மேல் பாலம் கட்டும் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (15.07.2022) அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றிம், ஆதனூர் மற்றும் மழவராயநல்லூர் இடையே மருதையாற்றில் வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் இடையூராக சாலை போக்குவரத்து உள்ளதாலும் ஓரியூர் சாலை வழியாக ஆதனூர் செல்லவதற்கு பிரதான சாலையிலிருந்து 8 கி.மீ தொலைவு உள்ளது. பாலம் கட்டும் பணி முடிவடைந்தால் 3கி.மீ பிரதான சாலையை அடைய முடியும்.

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஆதனூர்-மழவராயநல்லூர் சாலையில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 0.6 கி.மீ-ல் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

பணிகள் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு பொதுமக்கள் தற்போது சாலையினை பயன்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்து பாலத்தின் நீளம் மற்றும் அகலம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இப்பாலத்தில் 18 மீ நீளமுள்ள 10 கண்கள் அமைக்கப்பட உள்ளது என துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாலப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் விஜயலெட்சுமி, கோட்டப்பொறியாளர் வடிவேல், உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப்பெறியாளர் பரியதர்ஷனி கோட்டாட்சியர் குமார், வட்டாட்சியர் குமரைய்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News