அரியலூர் மாவட்ட தடகள போட்டிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

Update: 2022-10-13 12:21 GMT

அரியலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டியை அமைச்சர் சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஊராட்சி மு.புத்தூர் கிராமத்தில் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறை மற்றும் குளியலறை வளாகங்களை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ராம்கோ சிமெண்ட்ஸ் (கோவிந்தபுரம்) நிறுவனத்தின் நிறுவன சமூகப் பொறுப்பு செயல்பாட்டுத் துறை நிதியின் மூலம் ரெட்டிப்பாளையம் ஊராட்சி, மு.புத்தூர் கிராமத்தில் கட்டப்பட்ட 53 தனிநபர் கழிப்பறை மற்றும் குளியலறை வளாகங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

கடந்த நிதியாண்டில் (2020-2021) ஆரம்பத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது ஆலை மற்றும் சுரங்க பகுதிகளை சுற்றியுள்ள அமீனாபாத், நல்லாம்பத்தை, சின்னநாகலூர் மற்றும் மு.புத்தூர் ஆகிய நான்கு கிராமங்களில் 100 தனிநபர் நவீன கழிப்பறைகளுடன் கூடிய குளியலறைகளை கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்கள். மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 100 கழிவறைகளை மேற்கண்ட கிராமங்களில் கட்டிவருகிறது.

இந்நிலையில் மு.புத்தூர் கிராமத்தில் மட்டும் இரண்டு ஆண்டுகளில் 53 தனிநபர் கழிப்பறைகளை கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளனர். மேலும் இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள் ஸ்வச் பாரத் இயக்கத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் (கோவிந்தபுரம்) அரியலூர் ஆலையின் நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டு துறையின் மூலம் தனிப்பட்ட வீடுகளுக்கு நவீன கழிவறை கட்டிக்கொடுத்து வருகிறது. இதன்படி மு.புத்தூர் கிராமத்தினை முற்றிலும் திறந்த வெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றி அமைத்துள்ளது.

மேலும் இந்த இரண்டு வருட காலத்தில் கிராமாலயா நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள கழிவறைகளின் உபயோகத்தினால் ஏற்படும் பயன், மாதவிடாய்கால சுகாதாரம், சுகாதாரமான ஊட்டச்சத்து, திடக்கழிவு மேலாண்மை போன்றவை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இதன் பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் 2022-23ம் கல்வி ஆண்டின் 65வது குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் அரியலூர், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய குறு வட்டங்களை உள்ளடக்கிய அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 14, 17, 19 வயதிற்குட்பட்ட ஆகிய மூன்று பிரிவுகளில் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் சுமார் 700 மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்வதுடன் 20022-23 ஆம் கல்வி ஆண்டில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி  ஏற்று நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொ.சந்திரசேகர் நகர்மன்ற தலைவர் சாந்திகலைவாணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  அறிவழகன் மற்றும் கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனர் தாமோதரன், ராம்கோ சிமெண்ட்ஸ் அரியலூர் ஆலை தலைவர் மதுசூதன், குல்கர்னி, மூத்த துணை தலைவர் (நிர்வாகம்) ராம்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News