சத்துணவு மையத்தினை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர்
அரியலூர் மாவட்டம் ஓ.கூத்தூர் கிராமத்தில் சத்துணவு மையத்தினை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
அரியலூர் ஒன்றியம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஓ.கூத்தூர் கிராமத்தில் ரூ.4.52 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சத்துணவு மையத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கும், பழுதடைந்த கட்டிடங்களை புனரமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில், அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.கூத்தூர் கிராமத்தில் ரூ.4.52 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், செயற்பொறியாளர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.