அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.செயற்குழுக் கூட்டம்
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டம் அரியலூர் பழனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா, அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்தில் அதிபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் உ.பி மாநிலத்தில் மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மனிதாபிமானமற்ற முறையில் வாகனத்தை ஏற்றி கொலை செய்த பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் மகன் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அடகு வைத்துள்ள நகைக்கடையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த அரசு அறிவித்திருந்தது. ஆனால் ஆறு மாத காலமாகியும் நகைகள் விவசாயிகளுக்கு திரும்பி வழங்கப்படவில்லை விவசாயிகள் அடகு வைத்த நகைகளை உடன் திருப்பி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்,
அரியலூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் சூழலில் மாவட்டத்தில் ரசாயன உரம் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. மாநில அரசு தட்டுப்பாட்டை போக்கி, அனைத்து பகுதிகளிலும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசிற்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்கால நம்பிக்கையாக வளர்ந்து வரும் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ விற்கு கட்சியில் மாநில பொறுப்பாளர் பதவி வழங்கி, அவரை கட்சி பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகர செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல். வாரணாசி ராஜேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.