அரியலூர் மாவட்டத்தில் 3000 ஏக்கரில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம்

திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் டெல்டா வட்டாரங்களில் 3000 ஏக்கரில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Update: 2022-06-29 07:47 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:/

குறுவை தொகுப்பு திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, 3000 ஏக்கரில் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் டெல்டா வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. குறுவை தொகுப்பு திட்டம் அரியலூர் மாவட்டத்தில் ரூ1 கோடியே 15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

குறுவை தொகுப்பு திட்டம் - 2022-ஆம் ஆண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்குவதற்காக ரூ1 கோடியே 15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பிலான ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.17.50 வீதம் 40 டன் விதைகள் 5000 ஏக்கருக்கு விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாற்றுபபயிர் சாகுபடி சிறுதானியங்கள் - குறுவை பருவத்தில் மாற்றுபபயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு 500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருட்கள், விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத்தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

பயறு வகைகள் - குறுவையில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 1000 ஏக்கரில் உளுந்து பயிரிடும் போது விவசாயிகளுக்கு விதைகள், இலை வழி உரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1,250-ம், ஆதிதிராவிட விவசாயிகளுக்க 70 சதவீத மானியத்தில் ரூ.1570-ம் வழங்கப்பட உள்ளது.

எண்ணெய்வித்து பயிர்கள் - குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி, நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக 400 ஏக்கரில் பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4000 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5600 வரையிலும் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் டெல்டா வட்டார வுpவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News