அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால் பரங்கிகாய் மகசூல் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால் பரங்கிகாய் மகசூல் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-09 06:05 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிக்காய் வயல்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகள் மானாவாரி பயிர்களையே சார்ந்துள்ளன. முத்துச்சோளம், பரங்கிக்காய், பூசணிக்காய், பருத்தி உள்ளிட்ட பயிர்களையே மானாவாரி பயிர்களாக அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் ராயபுரம், பொய்யாத நல்லூர், இலுப்பையூர், சென்னிவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பரங்கிக்காய் சாகுபடியை விவசாயிகள் கடந்த நான்கு வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர். பராமரிப்பு செலவு, நீர் தேவை குறைவாக தேவைப்படுவதால் பரங்கிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இவ்வருடம் மாவட்டத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரங்கிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது பூப்பூக்கும் பிஞ்சு விடும் தருவாயில் பயிரானது காணப்படுகிறது. இந்நிலையில் குழுமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனங்களில் உள்ள மயில்கள் நீர் தேவைக்காகவும் உணவிற்காகவும் தங்களது இருப்பிடத்தை விட்டு சாகுபடி செய்யக்கூடிய வயல் பரப்பிற்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால் பரங்கிக்காய் சாகுபடி செய்துள்ள வயல்கள் மயில்களின் புகழிடமாக தற்போது மாறி வருகிறது. இயற்கையிலேயே பரங்கிக்காய் இனிப்பு தன்மையுடன் இருப்பதால் மயில்கள் இதனை விரும்பி சாப்பிடுகின்றன. மேலும் காய் விடும் தருவாயில் உள்ளதை கொத்தி சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.

மயில்களை துரத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனை முழுமையாக துரத்த முடியாமலும் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இதற்காக விவசாயிகள் காலை ஏழு மணி முதல் இரவு 8 மணி வரை தங்களது வயலிலேயே தங்கி இருந்து மயில்களை துரத்துவதை முழு வேலையாக செய்து வருவது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. இது ஒரு புறம் என்றால் குரங்குகளின் தொல்லையும் அதிக அளவில் உள்ளது. பரங்கிக்காய் வயலுக்கு படையெடுத்து வரும் குரங்குகள் சிறிய சிறிய பிஞ்சுகளை பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றன. இவற்றை துரத்துவது விவசாயிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.


இது குறித்து பரங்கிக்காய் சாகுபடி செய்துள்ள செந்தில்குமார் என்பவர் கூறும் போது பரங்கிக்காய் வயல்களில் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தி வரும் தேசிய பறவையான மயில்களை துரத்துவது பெரிய சவாலாகவே உள்ளது. சிறிய சிறிய பிஞ்சுகளை கொத்தி விடுவதால் பெருக்காமல் அழுகி விடுகிறது. இதனால் பெருமளவில் மகசூல் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் குரங்குகளின் தொல்லையும் அதிக அளவில் இருப்பதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சாகுபடி வயலில் இருக்கக்கூடிய மயில்களை வனத்துறையினர் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாகுபடி செய்துள்ள முத்துச்சோளமும் விளைச்சலுக்கு வரும்போது இந்த மயில்களின் தொல்லை பெருமளவில் அதிகரிக்க கூடும். அதற்குள்ளாக வனத்துறையினர் மயில்களை வனத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News