ஜெயங்கொண்டத்தில் சுவர் இடிந்து விழுந்து பாட்டி, பேரன் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே, மின்னல் தாக்கி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாட்டி, பேரன் உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், தேவாங்க முதலியார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மற்றும் ஆறுமுகம். இவர்களின் வீடு அடுத்துடுத்து உள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இரவில் ஜெயங்கொண்டத்தில் மழை பெய்தது.
இந்நிலையில், மாடி வீட்டில் வசிக்கும் சுப்ரமணி வீட்டின் தண்ணீர் தொட்டியில், மின்னல் தாக்கி, சுவர் இடிந்து ஆறுமுகம் ஓட்டு வீட்டின் மேலே விழுந்தது.
இதில், ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தின் அம்மா லட்சுமி (85), மூன்றாவது மகன் அஜித் குமார்( 25) ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் விழுந்ததால் அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடி வந்து பார்த்த போது, சம்பவம் குறித்து தெரியவந்தது.
தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உடல்களை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், உயிரிழந்த அஜித்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இன்னும் 20 நாட்களில் திருமணம் ஆக இருந்த நிலையில், அவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.