தடையினை மீறி ஆட்டுச்சந்தை நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு
தடையை மீறி ஆட்டுச்சந்தை நடத்திய நபர்களை கைது செய்து கயர்லாபாத் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரத்தினை காக்கும் வகையிலும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரநிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியில் பூங்காக்கள், மற்றும் வாரச்சந்தைகள் உள்ளிட்டவைகள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று அரியலூர் வட்டம், அமினாபாத் கிராமத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி, ஆட்டுச் சந்தை நடத்தப்பட்டது என புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தலின்பேரில், வருவாய்த்துறையினர் மூலமாக மேற்காணும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரியலூரைச் சேர்ந்த சசிக்குமார் மற்றும் குமார் ஆகியோர் நபர்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மீறி ஆட்டுச்சந்தை நடத்தியதற்காக கயர்லாபாத் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.