அரியலூர் மாவட்டத்தில் காந்தி, நேரு பிறந்த நாளையொட்டி பேச்சுப் போட்டி

அரியலூர் மாவட்டத்தில் காந்தி, நேரு பிறந்த நாளையொட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது.

Update: 2021-09-23 09:09 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பின்படி, 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டியும், நவம்பர்-14-ஆம் நாள் ஜவகர்லால் நேரு  பிறந்த நாளையொட்டியும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 02-10-2021–சனிக்கிழமை அன்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000/- வீதம் வழங்கப்பெறவும் உள்ளது.

இப்போட்டியானது காலை 10.00 மணிக்குத் தொடங்கப்படும் எனவும் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News