முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் ஏஐடியுசி கோரிக்கை
முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக ஊக்கப்படுத்தி அனைவருக்கும் கொரானா தொற்று 2வது அலைகாலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
அதனை போன்று, உள்ளாட்சித் துறையில் முன் களப்பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், சுய உதவி குழு பணியாளர்கள், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கியதைப் போல் கொரான கால ஊக்கத்தொகை வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பிக்கவும் மற்றும் கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகள், உயிரிழப்பு நிவாரணம், கட்டணமில்லா சிகிச்சை, தினசரி உடல் பரிசோதனை உள்ளடங்கிய கோரிக்கை மனு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதைடம் ஏஐடியுசி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட உள்ளாட்சி துறை ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் சார்பாக, சங்க தலைவரும், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினருமான த. தண்டபாணி மற்றும் அரியலூர் நகராட்சி சங்க நிர்வாகிகள் எஸ். மாரியப்பன் சிவஞானம் ஆகியோர் இக்கோரிக்கை மனுவை வழங்கினர்.