வி.கைகாட்டி அருகே பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது
காவல் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான பெண் காவலர்கள், மோசடி செய்த மருதாம்பாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, செல்வமுத்துகுமரன் மனைவி மருதாம்பாள் (37), அதே பகுதியைச் சேர்ந்த பலரிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். நிலம் வாங்குவதற்கு உடனடியாக பணம் வேண்டும்; வங்கி மற்றும் சுய உதவிக்குழுவில் கடனாகப் பணம் பெற்று தரும்படியும், நகைகளை அடகு வைத்து கடனாகப் பணம் தரும்படியும் வற்புறுத்தி, அப்பகுதி மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் சில வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரிடம் 1,53,000 ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேற்கொண்டு சத்யா அளித்த புகாரின் அடிப்படையில் கயர்லாபாத் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் இவர் அப்பகுதி மக்களிடையே பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார் என்று தெரியவந்தது. காவல் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான பெண் காவலர்கள், மருதாம்பாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனைத் தொடர்ந்து மருதாம்பாளை காவல்துறையினர் திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.