அரியலூர்: வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-02-20 09:45 GMT

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் 19.02.2022 நடைபெற்றது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளைம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் மையங்கள், கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் கண்காணிப்பு அறை, வாக்கு எண்ணும் மையத்தில் வார்டு வாரியாக வாக்குகள் எண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மேசை, நாற்காலிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமரும் இடம், சுற்றுகளின் எண்ணிக்;கை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமரும் இடம், முடிவு அறிவித்தல் மற்றும் வெற்றிச்சான்றிதழ் வழங்கும் இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரும் வழி, ஒவ்வொரு வார்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வெளியேறும் வழி, காவல் துறை பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, வாக்கு எண்ணிக்கை நாளான 22.02.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, வாக்கு எண்ணிக்கையின் போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில், நகராட்சி ஆணையர்கள் த.சித்ராசோனியா (அரியலூர்), சுபாஷினி (ஜெயங்கொண்டம்), பேரூராட்சி செயல் அலுவலர்கள் கோமதி (உடையார்பாளையம்), ஜெயசெல்வி (வரதராஜன்பேட்டை) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News