அரியலூர் கலெக்டர் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டம் ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் “நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-08-23 08:23 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “நம்ம ஊரு சூப்பரு’’ திட்டம் பற்றிய கூட்டம் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், "நம்ம ஊரு சூப்பரு" என்ற சிறப்பு இயக்கம் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட 'நம்ம ஊரு சூப்பரு" என்ற சிறப்பு இயக்கம் 20.08.2022 முதல் 02.10.2022 வரை நடைபெற்று வருகிறது. இவ்வியக்கம் தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொது இடங்கள், பொது நிறுவனங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், வீடுகள், நிறுவனங்களில் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை மற்றும் மாற்றுப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல் போன்ற சிறப்பு செயல்பாடுகளை மேற்கொண்டு அரியலூர் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News