கோடை மழையினை பயன்படுத்தி உழவுசெய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் கோடை மழையினை பயன்படுத்தி உழவு செய்யுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்

Update: 2022-05-09 08:55 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டு தோறும் 1,00,000 எக்டேரில் சாகுபடி செய்யப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 38000 எக்டேர் பாசன வசதியுடனும், 62,000 எக்டேர் மானாவாரிப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவான 954 மிமீ-ல். கோடைகாலத்தில் சராசரியாக 83 மில்லி மீட்டர் மழையளவு பெறப்படுகிறது.

தற்சமயம் அரியலூர் மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருவதால்,  விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்யலாம்.

கோடை உழவு செய்வதினால்  மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகிறது. கோடை உழவினால், மண்ணானது ஈரமும் மற்றும் காய்ச்சலுமாக இருப்பதால் மண்ணின் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது.மேலும், வயலில் அங்கக மற்றும் தொழு உரம் இடுவதினால் மண்ணில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை பல்கி பெருகி மண்ணின் வளம் மேம்படும். களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு சிதைவுற்று மண்ணிற்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

கோடை மழை, வளி மண்டலத்திலுள்ள நைட்ரேட்டுடன் இணைந்து பெறப்படுவதினால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது. மண்ணில் உள்ள பூச்சிகள், கூட்டுப் புழுக்கள், அவற்றின் முட்டைகள், பூஞ்சாணம் மற்றும் நோய் பரப்பக் கூடிய பாக்டீரியாக்கள், நூல் புழுக்கள் இவை அனைத்தும் முழுமையாக மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.

பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய களைகள், அவற்றின் விதைகள் முழுவதுமாக மக்கி மண்ணிற்கு உரமாக மாற்றப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்பட்டு மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது.

இத்தகைய பயன்தரக்கூடிய கோடை உழவினை அனைத்து விவசாயிகளும் தற்போது பெய்துள்ள மழையினை பயன்படுத்தி  வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் உழவு செய்திட சம்பந்தப்பட்ட வேளாண் பொயிறியல் துறையின் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News