அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணி திட்டங்களை ஆய்வு செய்த கலெக்டர்

அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் சென்று பார்வையிட்டார்.

Update: 2022-05-09 08:40 GMT

வளர்ச்சி பணி திட்டத்தை ஆய்வு செய்த கலெக்டர் ரமண சரஸ்வதி.

தமிழ்நாடு முதலமைச்சர், முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுப்பெற்றதையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர், முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுப்பெற்றதையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் சென்று திட்டங்களை பார்வையிட்டு, பொதுமக்களிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், திட்டத்தின் செயல்பாடு மற்றும் பொதுமக்கள் பயன்பாடு குறித்தும் எடுத்துரைத்தார்.

இதன்படி, அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நிறைவேற்றப்பட்ட திட்டமான இலுப்பையூர் வேங்கன் ஏரி வடக்கு மற்றும் தெற்கு மதகுகள் கட்டும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.21.48 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டதை கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு, பொதுமக்களிடம் இத்திட்டம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

இலுப்பையூர் வேங்கன் ஏரி வடக்கு மற்றும் தெற்கு மதகுகள் கட்டும் பணி ரூ.21.48 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனால் இந்த ஏரியில் நீர் நிரம்பி இப்பகுதி விவசாயிகள் ஒருபோக விவசாயம் செய்து பயன்பெற்றுள்ளதுடன் மீதமுள்ள நீரில் மீன் வளர்ப்பு செய்தும் பயன்பெற்றுள்ளனர். 

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஒட்டக்கோவில் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் செய்யப்பட்ட நூலகக் கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, நூலகத்தின் பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்பொழுது நூலக கட்டிடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால் நூலகத்தில் பல்வேறு விதமான புத்தகங்களை படித்து, பொது அறிவை வளர்த்துக்கொள்வதுடன் அருகிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த நூலகம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும், இதேபோல் மாவட்டத்தில் 7 நூலகங்கள் சுமார் ரூ.10.31 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

பின்னர், பொய்யாதநல்லூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒரு இலட்சம் மின் இணைப்பு திட்டத்தின்கீழ் மின் இணைப்பு பெற்ற விவசாயி இளைபெருமாள் வயலை நேரடியாக சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இத்திட்டத்தின்கீழ் மின் இணைப்பு பெற்ற பயனாளி தெரிவிக்கையில், ஏற்கனவே 1.44 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிட்டு வந்ததாகவும், தற்பொழுது மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் கரும்பு, கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு பயன்பெற முடியும் என்றும், மின் இணைப்பு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திரு.சு.சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன், மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News