செல்போன் டவர் அமைத்து வாடகை வாங்கி தருவதாக மோசடி செய்த 4பேர் கைது

செல்போன்டவர் அமைத்து நல்ல வாடகை வாங்கி தருவதாக ரூ. 24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-22 15:07 GMT

கைது செய்யப்பட்ட 4 பேர்.

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமம், மேற்குத்தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜேந்திரன்(வயது52 )என்பவருக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் அவரது இடத்தில் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாகவும், நல்ல முன்பணம் மற்றும் மாதந்தோறும் நல்லவாடகை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய ராஜேந்திரன் மீண்டும் தொடர்பு கொண்டு பேசியபோது மொபைலில் டவர் அமைக்க முன்பணம் 40 லட்சம் மற்றும் 40,000 மாத வாடகை பெற்றுத்தருவதாக கூறியதோடு அவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளனர்.

இதனை நம்பிய ராஜேந்திரனிடம் மீண்டும் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், வங்கி அதிகாரிகள் பேசுவதுபோல் இதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்து ரூ.24லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரன் தனக்குவந்த செல்போன் அழைப்பு மற்றும் குருஞ்செய்திகளை தொடர்பு கொண்டபோது அந்த மோசடி கும்பலின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட சைபர்க்ரைம் போலீசாரிடம் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இதன்பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, உடனடியாக விசாரணையில் ஈடுபட்டதால் வங்கி பரிமாற்றம் நடைபெற்றதில் இருந்து ரூ. 9,33,745- வங்கியில் முடக்கம் செய்து, நீதிமன்றத்தின் மூலம் ரூ.1,25,292 மனுதாரரிடம் மீட்டு கொடுக்கப்பட்டது.

மேலும் இக்குற்றவாளிகளை கைது செய்ய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதல்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, (பொறுப்பு) இணையக்குற்ற பிரிவு திருமேனி அறிவுரைப்படி, இணையக்குற்ற காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன், இணையக்குற்ற காவல்நிலையம், காவலர்கள் ஜாஹீர்உசைன், சுரேஷ்பாபு, அரவிந்தசாமி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.


இதனையடுத்து சிறப்புகுழுவினர் டெல்லி சென்று சகர்பூர் இந்திரா நகர் என்ற இடத்தில் 1.மருதுபாண்டியன் (37), த.பெ.சுப்ரமணியன். 2.ராஜேஷ்(36), த.பெ.சண்முகதேவர். 3.முருகேசன் (40), த.பெ.ராமசாமி. 4.ராஜ்கிஷன் (42), த.பெ.பாலகிருஷ்ணன். ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 03 மடிகணினிகள், 42 கைப்பேசிகள், 18சிம்கார்டுகள், 07 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 19 ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் ஒருலட்சம் ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களிடம் சைபர் க்ரைம் போலீசார் தீவிரவிசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, கைதுசெய்யப்பட்ட நான்குபேரின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரத்தை சுற்றியுள்ள ஊர்கள் என்றாலும் கடந்த 15ஆண்டுகளாக டெல்லியில் தங்கியுள்ளனர். மேற்படி நபர்கள் டவர் அமைப்பது, லோன் தருவது, ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவது போன்ற இணையக் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு மோசடிகள் செய்வது தெரியவருகிறது. மேற்படி எதிரிகளின் வங்கி கணக்குகள், அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியா முழுமைக்கும் இவர்கள் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டு விரிவான விசாரனை நடைபெற்று வருகிறது என்றார்.

Tags:    

Similar News