புளியமரத்தில் கார் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

அரியலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-05-24 04:45 GMT

சாலை விபத்தில் 4 பேர் உயிரை பலி வாங்கிய கார்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சென்னையில் உள்ள info-tech ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி பிரியா, தாய் மஞ்சுளா குழந்தைகள் மித்ரா, யாஷினி ஆகிய 5 பேரும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று கிளம்பி சென்னைக்கு செல்லும் வழியில் அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் என்ற இடத்தில் சாலையோர புளிய மரத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லட்சுமி பிரியா மேலும் தாய் மஞ்சுளா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் அவரது இளைய மகள் யாஷினி படுகாயத்துடன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் பெரிய மகள் மித்ரா லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து கீழப்பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதங்களை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News