அரியலூரில் அரசு மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்களுக்கு 5 ஆடுகள் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

Update: 2021-12-01 06:52 GMT

2021-22-ஆம் ஆண்டிற்கான ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 600 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் கொள்முதல் செய்து வழங்கப்பட உள்ளது.

திட்டம் பற்றிய விவரங்கள்: இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் பெண்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவராக இருத்தல் வேண்டும். கணவனை இழந்த அல்லது கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்களாகவும், தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். 60 வயதிற்கு உட்பட்டவராகவும், நிலமற்றவராகவும் (குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் நிலம் இருத்தல் கூடாது), தற்போது மாடு / ஆடு வைத்திருக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.

முந்தைய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவைப் பசுக்கள் மற்றும் இலவச வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் மற்றும் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டங்களில் பயன்பெறாதவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் மத்திய அரசு / மாநில அரசு / கூட்டுறவு துறைகளில் பதவியில் இருத்தல் கூடாது. இத்திட்டத்தில் வழங்கப்படும் ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு வைத்து பராமரிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களாக தேர்வு செய்யப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான பெண்கள், அவர்களது பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 09.12.2021-க்குள் கால்நடை உதவி மருத்துவரிடம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News