மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தெய்வசிகாமணி குடும்பத்தினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

Update: 2022-02-28 10:45 GMT

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்கள் குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். தெய்வசிகாமணியின் வீட்டிற்கு அருகில் மரப்பட்டறை நீண்ட வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மரப்பட்டறையில் இருந்து வரக்கூடிய மரதுகள்கள் புகை மற்றும் அளவுக்கதிகமான சத்தம் ஆகியவற்றால் தெய்வசிகாமணி குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மரப்பட்டறையில் இருந்து வரக்கூடிய மரதுகள்கள் புகை ஆகியவற்றால் சமைக்கவும், சமைத்த உணவை உண்ணவும் முடியாத வகையில் இவர்கள் வீடு முழுவதும் மரத்துகள்கள் பரந்து காணப்படுவதாகவும், இதனை சுவாசிப்பதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெய்வசிகாமணி தெரிவிக்கிறார்.

இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மரப்பட்டறையை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெய்வசிகாமணி புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாலையில் சமைத்து உணவு உண்ணும் போராட்டத்திலும் தெய்வசிகாமணி குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த தெய்வசிகாமணி குடும்பத்தினர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெய்வசிகாமணி எங்களது வீட்டின் அருகில் உள்ள மரப்பட்டறையை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டில் மரப் பட்டறையில் இருந்து வரக்கூடிய துகள்கள், தூசிகள் மற்றும் புகையினால் தினம் தினம் செத்து கொண்டிருப்பதாகவும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறும் தெய்வசிகாமணி, உடனடியாக மரப்பட்டறையை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News