அரியலூர்: வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் மகன் சிற்றரசு(23), கண்ணதாசன் மகன் இளையராஜா23), சித்திரவேல் மகன் சக்திவேல் (23) உள்ளிட்ட மூவரும் சேர்ந்து வண்ணம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் ஆடுவாங்க எடுத்துச் சென்ற 5 ஆயிரத்தை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தார்.
மேலும் இதுகுறித்து அரியலூர் டி.எஸ்.பி. மதன் குமார் மற்றும் எஸ். பி. பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழிப்பறி செய்த மூவரையும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான ஆணை நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிற்றரசு உள்ளிட்ட மூவரிடமும் வழங்கப்பட்டது.