அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-05 03:41 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தொழிற்பழகுநராக மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் மாதாந்திர உதவி தொகையுடன் பயிற்சி பெற அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 07-10-2021 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது/

இம்முகாமில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி சிமெண்ட் மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற்று பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்கள், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பயிற்சிகாலத்தில், தொழில் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்தோறும் ரூ.6500 முதல் ரூ.8000 வரை உதவித்தொகை தொழில் நிறுவனத்தால் வழங்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு, தொழிற்பழகுநர் பயிற்சியை முடித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு பெறும் முன்னுரிமை தகுதியினை அடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News