அரியலூர் கலெக்டரிடம் 50 ஆக்சிஜன் சிலிண்டர் டால்மியா நிறுவனம் வழங்கல்
அரியலூர் டால்மியா நிறுவனம் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பிலான 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கலெக்டர் ரத்னாவிடம் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பிலான 50 ஆக்சிஜன் சிலிண்டர்களை மாவட்ட கலெக்டர் த.ரத்னாவிடம் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை காக்கும் பொருட்டு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமை தாஙகினார்.
அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். ரூ.15 இலட்சம் மதிப்பில் 50 ஆக்சிஜன் சிலிண்டர்களை டால்மியா சிமெண்ட் நிறுவன ஆலைத்தலைவர் ராபர்ட் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். சிலின்டர்களை மாவட்ட மருத்துவகல்லூரி டீனிடம் ஒப்படைக்கப்பட்டு, உரிய நபர்களுக்கு பயன்படுத்துமாறு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
மேலும் மாவட்ட கலெக்டர் ரத்னா கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கோவிட்-19 பெருந்தொற்றின் தீவிர தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பெருந்தொற்றின் தீவிர தாக்குதலால் பாதிக்கப்பட்டு. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் இயங்கி வரும் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
அதனைத்தொடர்ந்து, கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் மக்களின் மருத்துவ தேவைக்காக ரூ.15 இலட்சம் மதிப்பில் 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3000 கிலோ ஆக்சிஜன் நோயாளிகளுக்கு வழங்க முடியும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிக பயனுள்ளதாக இருக்கும். எனவே, பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.