நகர்ப்பற உள்ளாட்சி தேர்தல்: அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க விருப்ப மனு
அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது
தமிழகத்தில் நகர் மன்ற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் நவ.26 முதல் 29 ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களிலுள்ள கட்சி அலுவலகத்தில் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்து இருந்தது.
அதன்படி அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சிகள், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை என இரு பேரூராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், விருப்ப மனுக்களை வழங்கி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.
அரியலூர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து ஏ.பி.செந்தில், கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி.சங்கர், நிர்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கர், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மகளிரணி செயலர் ஜீவாஅரங்கநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.