அரியலூரில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அரசு கொறடா பிரச்சாரம்

அரியலூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அரசு தலைமை கொறடா பிரச்சாரம் செய்தார்.

Update: 2022-02-16 15:11 GMT

அரியலூர் நகராட்சி 9 வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க.  வேட்பாளர் மஹாலட்சுமியை ஆதரித்து முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அரியலூர் நகராட்சி 9 வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மஹாலட்சுமியை ஆதரித்து முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் பொற்காலமாக திகழ்ந்தது. தி.மு.க. கடந்த 2021 தேர்தலில் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, வெற்றி பெற்று விட்டது. ஆனால் வாக்களித்த மக்கள் தான் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசுதான். அதனை மூடி மறைத்து, நீட் மூலம் அரசியல் வியாபாரம் செய்து வருகிறது தி.மு.க. தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் 7 ஆண்டுகளாக தரமான பொங்கல் தொகுப்பும், நிதியும் கொடுக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நாங்கள் பொங்கல் தொகுப்பாக ரூ.2,500 கொடுத்தபோது, ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை விடுத்தார்.

தற்போது அவர்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இவர்கள் ஆட்சியில் கொடுத்த பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்களும் தரமில்லாமல் இருந்தன. தி.மு.க.வின் பகல் வேஷம் இப்போது கலைந்துவிட்டது. கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியாத அரசாக தி.மு.க. இருந்து வருகிறது. எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் கிடப்பில் உள்ள திட்டங்கள் மற்றும் அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார். பிரச்சாரத்தின் போது, அக்கட்சியின் நகர செயலர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News