அரியலூர்: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்புமுகாம்
அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்புமுகாம் நடைபெற்றது.
அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (10.05.2022) நடைபெற்றது.
இம்முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடைப்பராமரிப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளையும், கால்நடைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கால்நடை மருத்துவ முகாமினையும் பார்வையிட்டு, கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 2021-22ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தித் துறை மற்றும் கைத்தறி துறை, கைவினைப்பொருட்கள் துறை மற்றும் ஜவுளி கதர் துறை ஆகிய துறைகள் இணைந்து ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் அரியலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் 38 கிராமங்களில் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில், இச்சிறப்பு முகாம் நடைபெறும் அரியலூர் வட்டாரம், வாலாஜாநகரம் கிராமத்தில் மாவட்டகலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு, இச்சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார்.
இம்முகாமில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடைப்பராமரிப்புத் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதனைப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அலுவலர்கள் திட்ட விளக்க உரையாற்றி, பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
தொடர்ந்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு மானிய விலையில் தலா ரூ.1640/-, என ரூ.3280/- மதிப்பீட்டில் தார்பாய்களும், 1 பயனாளிக்கு மானிய விலையில் ரூ.4480/- மதிப்பீட்டில் கைத்தெளிப்பானும், 1 பயனாளிக்கு மானிய விலையில் ரூ.2060/- மதிப்பீட்டில் உளுந்தும், 2 பயனாளிகளுக்கு மானிய விலையில் தலா ரூ.600/- வீதம் ரூ.1200/- மதிப்பீட்டில் ஜிங்ச்;சல்பேட்டும், 1 பயனாளிகளுக்கு மானிய விலையில் ரூ.600/- மதிப்பில் ஜிப்சமும், 3 பயனாளிகளுக்கு கீரை விதைகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 34 விவசாயிகளுக்கு ரூ.24.30 இலட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன்களும், 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடன்களும், 1 பயனாளிக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டு அடமான கடனும், 1 சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் குழுக்கடனும், 1 கூட்டுப்பொறுப்பு குழுவிற்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவணிகர்களுக்கான குழுக்கடனும், 30 விவசாய உறுப்பினர்களுக்கு வேளாண் கடன் அட்டைகளும் என மொத்தம் 79 பயனாளிகளுக்கு ரூ.34,66,620/- மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
மேலும், இச்சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இம்முகாமில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், இணை இயக்குநர்கள் பழனிசாமி (வேளாண்),ஹமீதுஅலி (கால்நடை), கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் ஆனந்தன், உதவி இயக்குநர் பா.சரண்யா, ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயாஇளையராஜா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.