மினிபஸ் தலையில் ஏறியும் உயிர் பிழைத்த இளைஞர்..!
தலையை காத்த தலைக்கவசம்..!
அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே மினிபேருந்தின் சக்கரம் தலையில் ஏறியும் தரமான தலைகவசத்தில் ஐ.டியில் வேலை பார்க்கும் இளைஞர் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இன்று ஓட்டக்கோவில் கிராமத்தில் இருந்து அரியலூருக்கு இருசக்கர வாகனத்தில் சத்தியசீலன் வந்தபோது சுண்டக்குடி செல்லியம்மன் கோவில் வளைவின் எதிரே வி.கைகாட்டியில் இருந்து ஏலாக்குறிச்சி கிராமத்திற்கு சென்ற மினி பேருந்து மோதிவிபத்து ஏற்பட்டது. பேருந்து அடியில் ஒரு சக்கரத்தில் பைக்கும் மற்றொரு சக்கரத்தில் இளைஞரின் தலையும் சிக்கியது. அதிர்ச்சியடைந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்கி விபத்தில் சிக்கிய வாலிபரை பார்த்தபோது பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் அணிந்து சென்றிருந்த தலைக்கவசத்தின் மேலே ஏறி நின்றதால் சத்தியசீலனை உயிருடன் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தலைகவசத்தின் கிளிப்பை கழற்றி சத்தியசீலனை பத்திரமாக மீட்டனர். கை, கால் , நெஞ்சு பகுதி ஆகிய இடங்களில் சில காயங்கள் ஏற்பட்டாலும் தரமான தலைகவசத்தால் அவர் உயிர் பிழைத்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சத்தியசீலன் சிகிச்சை பெற்று வருகின்றார். தரமான தலைக்கவசம் அணிந்து சென்றதால் பேருந்தின் சக்கரம் வாலிபர் தலையின் மீது ஏறியும் அவர் உயிர் பிழைத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.