அரியலூரில் ஆட்சியர் தலைமையில் 2-ம் நாள் ஜமாபந்தி: 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு
அரியலூர் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில். அரியலூர் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இரண்டாம் நாளில் நாகமங்கலம் உள் வட்டத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டக்காடு, புங்கங்குழி, ஓரியூர் உள்ளிட்ட 13 கிராம மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 250 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அனைவருக்கும் உடனடியாக பட்டா மாறுதலுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வழங்கினார். மேலும், விசாரணையில் மீதம் இருக்கும் மனுக்களை உரிய தீர்வு காணவும், கிராமக்கணக்குகளை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி, ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் குமரையா, துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.