அரியலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பறிமுதல்
அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பணம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தேர்தல் அலுவலர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கோக்குடி கிராமத்தை சேர்ந்த சவுரிராஜன்(45) என்பவரை நிறுத்தி சோதனை செய்தில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.05 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அதனை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.