விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

Update: 2021-03-03 05:30 GMT

அரியலூர் மாவட்டம் தாதம்பேட்டையில் விவசாயி வீட்டில் சுமார் 20 பவுன் நகை மற்றும் நான்காயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் தாதம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் .விவசாயி. இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் சிலால் கிராமத்தில் உள்ள தனது குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று உள்ளனர். இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்புறம் உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது அருகில் இருந்த அறை கதவுகள் திறக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 20 பவுன் நகை மற்றும் நான்காயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது.மேலும் பீரோவில் இருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவை மற்றும் ஆவணங்கள் பீரோவிற்கு அருகில் எரிக்கப்பட்டு கிடந்தது. இந்த சம்பவம் குறித்து பொன்னம்பலம் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News