இலங்கை தமிழர்கள் 92 பேர் இதுவரை தஞ்சம்..!
அண்டை நாடான இலங்கையில் வாழ்வாதாரம் பாதிப்பால் ராமேஸ்வரம் கடற்கரையில் தம்பதியர் தஞ்சம் அடைந்தனர். இதனால் தஞ்சம் அடைந்த அகதிகள் மொத்தம் 92 பேர் ஆகியுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடு இலங்கையில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சரிவால் அன்றாடம் வாழ முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பிற நாடுகளின் போதுமான நிதியுதவியை பெற முடியாமல் தொடர்ந்து நெருக்கடியான சூழ்நிலையிலேயே இலங்கை அரசு பரிதவிக்கிறது.
விலைவாசி உயர்வு மட்டுமின்றி, எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வருபவர்கள் ராமேஸ்வரம் கடற்கரையை வந்தடைகின்றனர். இலங்கை திரிவோணமலையை சேர்ந்த வயதான தம்பதியினர் அகதிகளாக தனுஸ்கோடி வந்தனர்.
இதையடுத்து கடற்கரையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருவரும் மயக்க நிலையில் படுத்து கிடந்தனர். இதையடுத்து இருவரையும் கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதுவரை இவர்கள் இரண்டு பேருடன் சேர்த்து, இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள தமிழர்கள் தமிழகத்தில் 92 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.