36 மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம்; திருப்பதியில் அலைமோதும் பக்தர் கூட்டம்

கோடை விடுமுறை காலமாக இருப்பதால், திருப்பதியில் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது. 36 மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2023-05-18 07:13 GMT

திருப்பூரில் குவிந்து வருகிறது, பக்தர் கூட்டம் (கோப்பு படம்)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறதுது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக, திருப்பதிக்கு வருகின்றனர்.

இந்தியாவில், மிக பிரசித்தி பெற்ற கோவில்களில், திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாள் கோவில் விளங்குகிறது. வழக்கமான நாட்களிலேயே இந்த கோவிலில், பக்தர் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். அதுவும், பெருமாளுக்கு உகந்த விசேஷ காலங்களில், திருப்பதில், பக்தர் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், அடிக்கடி வந்து செல்லும், பிரபலமான கோவிலாக விளங்குகிறது.

தற்போது, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதால், கோடைகால விடுமுறையை கழிக்க பெரும்பாலானவர்கள் சுற்றுலா செல்கின்றனர். அதில், மிக முக்கியமான கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்றும், கோவிலில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இன்று காலை வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து கெங்கையம்மன் கோவில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தற்போது திருப்பதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், நேரம் ஒதுக்கிடு முறையில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏழுமலையின் கோவிலில் இன்று முதல் 20-ம் தேதி வரை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாரதனை, ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகள் தொடர்பான டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியிடப்படும். ஸ்ரீவாணி, அங்க பிரதட்சணம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் 23-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதேபோல் ரூ 300 தரிசன டிக்கெட் வரும் 24-ம் தேதியும், திருப்பதியில் அறை ஒதுக்கீடு 25-ம் தேதியும், திருமலையில் அறை ஒதுக்கீடு 26-ம்தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த சேவைகளை பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு பயனடைமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் நேற்று 79,207 பேர் தரிசனம் செய்தனர். 41,427 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 

Tags:    

Similar News