மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க கெடுவிதிப்பு..!

மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு சட்டசபையில் ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-02 11:39 GMT

மகாராஷ்டிரா புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஸ் அகாடி ஆட்சியில் இருந்தது. சட்டசபை மேலவை தேர்தலுக்கு பின்பு, சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூன் 20 ம் தேதி இரவில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.

அவர்களை திரும்ப வரும்படி சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் பலனில்லை. முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் 28 ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசித்தார். அதன்பின்னர் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் அன்றிரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்று ஆளுனரை சந்தித்தார்.

இந்நிலையில் ஜூன் 30 ம் தேதி சட்டசபையை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்நிலையில், பட்னாவிஸ் துணை முதல்வர் ஆவார் என்றும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியானது. இதன்படி, ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். பட்னாவிஸ் துணை முதல்வர் ஆனார். இதற்கிடையில், புதிய அரசு வரும் திங்கட் கிழமையன்று ( ஜூலை 4) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News