‘அச்சம் தவிர்’ தமிழ் குறும்படத்திற்கு தேசிய அளவிலான விருது..!

டெல்லியில் நடந்த விழாவில் ‘அச்சம் தவிர்’ தமிழ் குறும்படத்திற்கு தேசிய அளவில் மூன்றாமிட விருது வழங்கப்பட்டது.

Update: 2023-08-01 11:07 GMT

நீதிபதி கற்பக விநாயகத்துடன் அச்சம் தவிர் படக்குழுவினர் விருது மற்றும் சான்றிதழுடன் உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட 2022 ம் ஆண்டுக்கான குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற பட குழுவினருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு  டெல்லியில் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல்வேறு மனித உரிமை மீறல்கள்,  பெண்கள் உரிமை, குழந்தைகள் உரிமை போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு குறும்படங்களுக்கான போட்டிகளை நடத்துகிறது. இந்த மேற்சொன்ன தலைப்புகளில் கதை கருவாக எடுக்கப்படும் குறும்படங்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ், இந்தி,  மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம், வங்காளம், குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, அசாமிஸ் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் என சுமார் 123 குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டன.

இப்படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் நடுவர்களாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்  நீதியரசர் அருண் மிஸ்ரா  தலைமையில் உறுப்பினர்கள் டாக்டர் தயானேஷ்வர் எம்.முளே ,  ராஜிவ் ஜெயின் பொது செயலாளர் தேவேந்திர குமார் சிங், மனோஜ் யாதவ்,  சட்ட பதிவாளர் சுர்ஜித் தே இணை செயலாளர்கள் திருமதி.அனிதா சின்ஹா திரு. தேவேந்திர குமார் நிம் இணை இயக்குனர் ஜெய்மினி சிரிவட்சஸவா ,லீலாதர் மந்லாய் ஆவணப்படம் இயக்குனரும் தூர்தர்ஷன் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் பேராசிரியர் சங்கீதா பிரன்வேந்திரா அடங்கிய குழுவினர் பார்த்து அதிலிருந்து சிறந்த படங்களைத் தேர்வு செய்தனர்.


இதில் முதல் பரிசை மராத்திய மொழியில் எடுக்கப்பட்ட சேர்போக் குறும்படமும் 2ம் பரிசை அசாமிய மொழியில் எடுக்கப்பட்ட எனேபில்ட் படமும் 3 ம் பரிசை தமிழகத்திலிருந்து அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் எடுக்கப்பட்ட ‘அச்சம் தவிர்’ குறும்படமும் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றன.

இப்படக்குழுவினருக்கு விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நீதியரசர் அருண் மிஸ்ரா திரைப்படங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கும் என்று குறிப்பிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.


இவ்விழாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலாளர் பாரத் லால்,  இயக்குநர் ஜெனரல் (விசாரணை) மனோஜ் யாதவா ஆகியோர் முன்னிலையில் என்.எச்.ஆர்.சி. தலைவர்  நீதிபதி அருண் மிஸ்ரா, உறுப்பினர்கள், டாக்டர். தியானேஷ்வர் எம். முலே, திரு. ராஜீவ் ஜெயின் ஆகியோர் விருதுகளை வழங்கினர்

3ம் இடத்தை பெற்ற தமிழ் படமான அச்சம் தவிர் படத்திற்கு வழங்கப்பட்ட விருதினை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியம் மாநில மகளிர் பிரிவு தலைவர் லதா அர்ஜுனன் அச்சம் தவிர் படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல் இணை இயக்குனரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் குழுவாக விருதினை பெற்று கொண்டனர்.

அச்சம் தவிர் படத்தின் வெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதுடன் இப்படத்தில் பணியாற்றிய கோவை, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாக பார்க்கப்படுகிறது.  இப்படம் கோவையைச் சேர்ந்த அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் & தலைவர் ஆர். கே.குமார் முனைவர் வி. எச். சுப்ரமணியம் மாநில மகளிர் அணி தலைவர் லதா அர்ஜுனன் ஆகியோர் தயாரிப்பில் எடுக்கப்பட்டது.

இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எடிட்டிங் மற்றும் இயக்கத்தை குமார் தங்கவேல் செய்துள்ளார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ்  அச்சம் தவிர் படத்தில் இணை இயக்குனராகவும் இப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.


இப்படத்தில் ஒளிப்பதிவு பணியை யாசின், இசையை பேராவூரணியை சேர்ந்த பாலகுமார், ஸ்கிரிப்ட் ரைட்டிங்கை அங்கமுத்து , பாடலை சாஜித்பானு, லோகெஷன் மேனேஜர் பணியை வீர லட்சுமி, காஸ்டியும் மேனேஜர் பணியை திவ்யாவும் செய்துள்ளனர்.

இப்படத்தின் நடிகர்கள் நடிகைகள் கந்தசாமி, ஆண்டனி தாமஸ், அசோக் குமார், வேலுசாமி , வெண்மதி, பேராசிரியை அனிதா ஷில்பா, பியூலா சுலோஷனா, திருப்பூர் மீனா ஆகியோர் நடித்துள்ளனர். தேசிய விருதை பெற்று கொண்ட அச்சம் தவிர் பட குழுவினர் டெல்லியில் உள்ள முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவருமான நீதியரசர் கற்பகவிநாயகத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இச்சந்திப்பில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர். கே. குமார், பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியம், மாநில மகளிர் பிரிவு தலைவி லதா அர்ஜூனன், அச்சம் தவிர் பட இயக்குனரும் திருப்பூர் மாவட்ட செயலாளருமான குமார் தங்கவேல் அச்சம் தவிர் படத்தின் இணை இயக்குனரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் ஒளிப்பதிவாளர் யாசின் மற்றும் அச்சம் தவிர் பட நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஏ. வி.மணவாளனையும் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.

Tags:    

Similar News