ஆதரவற்ற 31 குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்த ஹன்சிகா

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

Update: 2023-01-18 04:24 GMT

நடிகை ஹன்சிகா மோத்வானி.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். ரோமியோ ஜூலியட், எங்கேயும் காதல், மனிதன், அரண்மனை, மான் கராத்தே, வேலாயுதம், புலி, மாப்பிள்ளை, வாலு, 100, குலேபகாவலி, ஒரு காதல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, ஆம்பள, போகன்,  உ.ள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். கடந்த டிசம்பர் 4-ம் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.

ஹன்சிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனது அம்மா சிறுவயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் அவர் கூறுவார். அதனால்தான் நான் கதாநாயகி ஆன பிறகு, ஆதரவு இல்லாத குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டேன். இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கின்றனர். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றேன். 20-ம் தேதி முதல் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட போகிறேன். கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இரண்டு வெப் தொடர்கள் உள்ளன. எனவே நான் மிகவும் பிசி'' என்று கூறியுள்ளார்.

ஹன்சிகா, சிறந்த நடிகையாக பல படங்களில் அவரது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதைவிட அவர் மிகச்சிறந்த ஒரு பெண்மணியாக, மனிதநேயம் மிக்கவராக ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்து, அவர்களுக்கு வாழ்வளித்து வருகிறார். மேலும், திருமணத்துக்கு பிறகும் தனது கலை பயணத்தை தொடர்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரு படத்தில் நடிக்கவே, நுாறு கோடி ரூபாய்க்கு மேல், சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் கூட இப்படி ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் தர முன்வருவதில்லை. நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், மாற்றுத்திறனாளிகள் பலருக்கு, ஆதரவு தந்து அவர்களை காப்பாற்றி வருகிறார். அதே போல், சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தார், சிகரம் அறக்கட்டளை வாயிலாக, பல ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி தந்து வருகின்றனர்.

இதுபோல, ஒரு சில நடிகர், நடிகையர் மட்டுமே, கோடிக்கணக்கில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, நலிவடைந்த, ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய தாமாக முன்வருகின்றனர். இதுபோல், உச்சத்தில் இருக்கும் மற்ற முன்னணி நடிகர்களும் இந்த மனிதநேய செயல்களில் ஈடுபட முன்வர வேண்டும் என்பதே, பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News