ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி

சமீபத்தில், மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நடிகர் விஜய் ஆண்டனி, நலம் விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-25 08:48 GMT

 ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி.

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலமாக, நடிகராக புதிய அவதாரம் எடுத்தார். தொடர்ந்து, அவர் நடித்த பல படங்கள், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. அவர் நடித்த படங்களை ரசிகர்கள், வரவேற்க துவங்கியதால், வசூலும் அள்ளியது. 

இவர் நடித்த படங்களின் பெயர்களே மிக வித்யாசமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பிச்சைக்காரன், எமன், திமிரு பிடிச்சவன், சைத்தான், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான் என இருந்ததை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில், திமிரு பிடிச்சவன் படத்தில், இன்ஸ்பெக்டர் முருகவேல் என்ற கேரக்டரில் மிக வித்யாசமான நடிப்பை தந்திருப்பார் விஜய் ஆண்டனி. அதேபோல், இந்தியா பாகிஸ்தான் படத்தில், வக்கீல் கேரக்டரில் காமெடி நடிப்பை தந்திருப்பார். 

இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கோடீஸ்வரனாக, வெளிநாட்டில் இருந்து திரும்பும் விஜய் ஆண்டனி, தாயின் உயிரை காப்பதற்காக, 48 நாட்கள், சென்னையில் பிச்சைக்காரனாக வாழ்வார். இந்த கேரக்டரில் நடிக்க பலரும் யோசிக்கும் நிலையில், அந்த கேரக்டரில் அனாயசமாக நடித்து, தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் விஜய் ஆண்டனி. அதனால்தான், இந்த படம், என்றென்றும் ரசிக்கும் ஒரு படமாக, ரசிகர்களுக்கு அமைந்து விட்டது.

இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் நடந்த போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. படகுகளில் சண்டை காட்சி நடந்த போது, படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் படகில் இருந்த விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். இதில்,  பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது விஜய் ஆண்டனி,  சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

படத்தின் இயக்குநர், கதாநாயகன் விஜய் ஆண்டனி என்ற நிலையில் அவர் உடல் நலம் தேறி வருவதால், பூரண குணமடைந்து அதற்கு பின்பே 'பிச்சைக்காரன்' இரண்டாம் பாகம் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் வாய்ப்புள்ளது. 

Similar News