மாற்றுத்திறனாளிக்காக கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர்
![மாற்றுத்திறனாளிக்காக கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர் மாற்றுத்திறனாளிக்காக கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர்](https://www.nativenews.in/h-upload/2024/05/23/1906973-collector4.webp)
வள்ளிபுரம் பஞ்சாயத்து, தோக்காதம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிக்காக கட்டப்படும் வீட்டை, மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் பஞ்சாயத்தில், மாற்றுத்திறனாளிக்காக கட்டப்பட்டு வீட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் பஞ்சாயத்து தோக்கம்பாளையத்தில், செல்வராஜ் என்ற மாற்றுத்திறனாளி நடக்க முடியாத நிலையில், தனது தந்தையுடன் (80) மிகச்சிறிய குடிசையில் வசித்து சிரமப்பட்டு வந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் உமா, அவர்களுக்கு கையால் இயக்க கூடிய மூன்று சக்கர சைக்கிள், வீட்டுமனை பட்டா நகல், மாத உதவித்தொகை ரூ.2,000 பெற்று வந்த நிலையில் கூடுதலாக ரூ.1,000 என மொத்தம் ரூ. 3,000 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை உடனடியாக வழங்கினார். மேலும், அவர்களது சொந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு, கடந்த பிப். 8ம் தேதி வழங்கப்பட்டு, சமூக பொறுப்பு நிதியிலிருந்து (சிஎஸ்ஆர்) ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று, மாற்றுத்திறனாளி செல்வராஜூக்காக, கட்டப்பட்டு வரும் வீட்டை, மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு, பணி முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விரைவாக பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு வழங்கும்படி அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
முன்னதாக, நாமக்கல் நகராட்சி உழவர் சந்தையில் மழைநீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை சீர் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். உழவர் சந்தையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நாமக்கல் முல்லை நகரில் பூங்கா அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முல்லை நகரில் செயல்பட்டு வரும் லைப்ரரி மற்றும் அறிவுசார் மையத்தை ஆட்சியர் பார்வையிட்டு அவர் தினசரி வருவதை தரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து முறையாக பராமரித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu