நலமாக இருக்கிறேன்...! புரளியால் மனம் நொந்துப் போன அப்துல் ஹமீது!

நலமாக இருக்கிறேன்...! புரளியால் மனம் நொந்துப் போன அப்துல் ஹமீது!
உயிருடன் இருக்கும் ஆளை இறந்துவிட்டதாக புரளி செய்தி பரப்பி வருகின்றனர் என ரசிகர்கள் வேதனை.

தான் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் பிரபல ரேடியோ பேச்சாளர் அப்துல் ஹமீது.

பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் உலக அளவில் தமிழர்களைக் கவர்ந்து இழுத்தவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது. இவர் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டதாக செய்திகளில் அடிபட, பலரும் அதனை உண்மை என நம்பி இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் இறந்ததாக கூறப்படுவது புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனை அவரே வீடியோவில் தோன்றி விளக்கம் அளித்துள்ளார். வருத்தத்துடன் பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

தனது தனித்துவமான தமிழ் பேச்சால், பிரபலமானவர் இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது. தமிழ் தனியார் தொலைக்காட்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட மனம் நொந்துவிட்டார் ஹமீது.

இணையத்தில் பரவிய தகவல் தன்னை மிகவும் வருந்தச் செய்ததாக கூறிய அவர், இதுவரை 3 முறை செத்து பிழைத்ததாக இவர் பற்றி வெளியான மரண வதந்தி குறித்து பேசியுள்ளார். கண்ணீர் மல்க தனக்கு பலரும் அழைப்பு செய்து விசாரித்ததாகவும், அவர்கள் அனைவரும் தன் மேல் அன்பு கொண்டவர்கள் எனவும் கூறியுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது,

"நம் எல்லோரையும் படைத்த ஏக இறையின் திருவருள் உங்கள் அனைவர் மீதும் பொழிவதாக.. மாண்டவன் மீண்டு வந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்க கூடும். நேற்று இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரையில் நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயம் படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலை கேட்டதும் அதை கதறி அழுவதை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. (கண் கலங்கிய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்)

எத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நான் நினைத்துக் கொண்டேன். நேற்று இலங்கை பத்திரிகைகளில் ஒரு கட்டுரையை நான் எழுதி இருந்தேன். அந்த கட்டுரையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது. மரணம் மனிதனுக்கு தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து அவனுடைய நல்ல பக்கத்தை மட்டும், அந்த நல்ல நினைவுகளை மட்டும் பேசி மகிழ்வது. அப்படி ஒரு அனுபவம் தான் எனக்கு கிடைத்திருக்கிறது.

காரணம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை நேசித்தாலும் என் துறைசார் பொறாமை காரணமாக அல்லது மதமாச்சரியங்கள் கொண்ட சிலர், விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இதுவரை காலமும் எதிர்மறையான விமர்சனங்களை பரப்பி இருக்கலாம். ஆனால் இந்த செய்தியை கேள்விப்பட்ட நேரம் முதல் என்னைப் பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே நினைத்து இருப்பார்கள். இது நம் வாழும் காலம் வரை தொடர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

இது எனக்கு மூன்றாவது அனுபவம். ஆம்..நாம் செத்துப் பிழைப்பது.. முதல் அனுபவம் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்து விட்டார்கள் என்ற வதந்தி இங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பரவி தமிழக பத்திரிக்கைகளிலும், கேரளத்து மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்ததை என்னுடைய வானிலைகளில் வழிப்போக்கன் என்ற நூலில் பதிவு செய்திருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் YouTube தளம் நடத்தும் ஒருவர் அதிக பணம் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடைய படத்தை போட்டு பிரபல டிவி தொகுப்பாளர் மரணம். கதறி அழுதது குடும்பம் என்று செய்தி பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை.

இது மூன்றாவது முறை. ஆகவே மூன்று முறை நான் உயிர்த்தெழுந்து இருக்கின்றேனா என்று நகைச்சுவையாக என்ன தோன்றுகிறது. நாம் இறந்த பிறகு நம்மீது உண்மையான அன்பும் பாசமும் வைத்திருந்தவர்கள் யார் யார் என்று பார்ப்பதற்கு நாம் இருக்க மாட்டோம். ஆனால் வாழும் காலத்திலேயே ஒரு முறை அதை கணிக்க அதை அறிந்து கொள்ள இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான் இது.

ஆகவே இந்த செய்தியை முதல் முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபம் விட்டிருக்கலாம். அந்த சாபங்களில் இருந்து இந்த மனிதரை காப்பாற்றும்படி அதே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன். ஏதோ ஒரு நன்மையை செய்திருக்கின்றார் அவர். ஆகவே அன்புள்ளங்களே எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கமும்.. நன்றி" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story