கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்திருந்த இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Update: 2022-03-21 13:06 GMT

மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை  அங்கிருந்த போலீசார் மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றினர் 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து மனு அளித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது செங்கம் தாலுகா பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி சிவா என்ற பெண் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் கூறுகையில், கண்பார்வையற்ற கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், அவர்களது நிலத்தை பக்கத்து நிலத்துக்காரர் தனக்கு  சொந்தமானது என மிரட்டல் விடுப்பதாக கூறினார். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்று கொண்டு அவருக்கு தவறான உரிமை சான்று வழங்கியாகவும் கூறிய அவர், இது குறித்து விசாரணை நடத்தி  நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அவரை போலீசார் குறைதீர்வு கூட்டத்திற்கு அழைத்து சென்று மனு அளிக்க செய்தனர்.

அதேபோல் திருவண்ணாமலை குபேர நகர் பகுதியை சேர்ந்த தென்றல் என்ற பெண்ணும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஒருவரிடம் மருத்துவ செலவிற்காக 20 பைசா வார வட்டியில் ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கியதாகவும், வாரம் ரூ.10 ஆயிரம் என 2 அரை மாதங்கள் வட்டி கொடுத்து வந்ததாகவும், தற்போது பணம் கொடுக்க முடியவில்லை என்பதால், அவர் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார்.

மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசாரும் கட்ட பஞ்சாயத்து செய்து வருகின்றனர். நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன் என்றாலும் விட மறுகின்றனர். நேற்று முன்தினம் 11 போலீசார் திடீரென வீட்டிற்கு வந்து மிரட்டினர். அந்த நபருக்கு சாதகமாக போலீசார் என் மீது பொய் வழக்கு சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News