இலவச வீட்டு கேட்டு திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம்

திருவண்ணாமலையில் இலவச வீடு கேட்டு திருநங்கைகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-08-22 01:45 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்

திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு கேட்டு திருநங்கைகள் ஒப்பாரி வைத்து முற்றுகை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை, செங்கம், வந்தவாசி, போளூர், கலசபாக்கம், ஆரணி, செய்யாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் இணைந்து வசித்து வருகின்றனர்.

பெரும்பாலான பகுதிகளில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தமிழ்நாடு அரசின் இலவச வீடு கேட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். சுமார் 200 முறைக்கு மேல் மனு அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பெரிய வீட்டு தலைவி ராதிகா நாயக், சின்ன வீட்டு தலைவி ஜீவா நாயக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அப்பொழுது அவர்கள் ஆட்சியர்  அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு போளூர் சாலையில் கைகளை கோர்த்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அலுவலக நுழைவு வாயில் முன்பு கோஷங்கள் எழுப்பிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 400 -க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு இலவச வீடு மாவட்ட நிர்வாகங்கள் கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச வீட்டிற்காக தாங்கள் போராடி வருகிறோம். இலவச வீடு கேட்டு பல்வேறு முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்று கூறினர்.பின்னர் அவர்கள் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் இலவச வீடு கேட்டு மனு அளித்தனர்.

Tags:    

Similar News