மழையால் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்: 'சிறப்பு' பேருந்தால் சோதனை!
பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியதால் பேருந்துக்குள் குடை பிடித்தவாறு பயணிகள் பயணம் செய்தனர்.
பௌர்ணமியை முன்னிட்டு பிற மாவட்ட மக்கள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்காக வேலூரில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்படி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து ஒன்று, நேற்றிரவு 7.00 மணி அளவில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சென்றுள்ளது.
அப்போது, பலத்த மழை பெய்தது. இதனால், அந்த பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியுள்ளது. இதனால் பெரும் அவதிக்குள்ளான பயணிகள், பேருந்துக்குள்ளேயே குடை பிடித்தவாறு பயணித்தனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்போது, இது போன்ற பழைய பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.