திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு

திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட, தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும் மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

Update: 2021-11-29 01:08 GMT

திருவண்ணாமலை மஹா தீபம் 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்காக கோவிலில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திரி மற்றும் நெய் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு ஏற்றப்படும்  தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வருகின்றனர். 

தொடர்ந்து மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11-வது நாளான இன்றுடன் (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை  (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அண்ணாமலையார்  கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு தீப மை சார்த்தப்பட்டு , நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் தீப மை வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விடுமுறை   நாட்களான சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையில் திருவண்ணாமலையில்  தொடர்ந்து மழை பெய்தாலும், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News