தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

செங்கம் பகுதியில் தீபத் திருவிழாவையொட்டி அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-11-17 10:40 GMT

பைல் படம்

ஒவ்வொரு ஆண்டும் தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மலை உச்சியில் கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். உலகில் உள்ள சிவபக்தர்கள் தீப திருநாளை முன்னிட்டு அகல்விளக்குகளை ஏற்றி வைத்து தீபத்திருநாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் மண்ணால் ஆன பானை, சட்டி, அடுப்பு, அகல்விளக்கு, குதிரை, யானை, நாய் உள்ளிட்ட பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தை பொங்கல் மற்றும் கோடை காலங்களில் மன்பானை செய்வது, கார்த்திகை மாதத்தில் அகல்விளக்குகள் செய்வது, திருவிழா காலங்களில் பொம்மைகள் செய்வது என சீசனுக்கு ஏற்றார்போல், மண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது. தீபத் திருவிழாவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் செங்கம் பகுதியில் தற்போது அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குடிசைத்தொழில் போல் இதை மேற்கொள்ளும் இவர்கள் இரவு, பகலாக அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இங்கு தயாராகும் அகல் விளக்குகளை, வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.

இங்கிருந்து வாங்கிச் செல்லும் அகல் விளக்குகளை திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, போளூர் , கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,  தற்போது கார்த்திகை மாத சீசன்.  மக்கள் மத்தியில் அகல் விளக்குகள் தேவைகள் அதிகம் இருந்தும் மழைக்காலம் என்பதால் காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் தரமான மண் கிடைப்பதில்லை. இதனால் தேவையான உற்பத்தி செய்ய முடிவதில்லை.

 50 பேர் வேலை செய்யும் இடத்தில் தற்போது 25 பேர் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் கூறினார்.

தற்போது சுற்றுச்சூழலுக்கு எந்த வித தீங்கையும் ஏற்படுத்தாத மண்ணால் ஆன விளக்குகள் மீது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த ஆண்டு மண் விளக்கிற்கு ஆர்டர்கள் வருவதாகவும் ஆனால் அதன் மூலப்பொருளான போதுமான மண் எடுக்க அனுமதி இல்லாததால் தேவைகள் அதிகம் இருந்தும் தயாரிக்க இயலாத நிலையே தற்போது உள்ளது.

அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தொழிலுக்கு தேவையான மண்,  தொழிலாளர்களுக்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News