ஜவ்வாது மலையில் நாளை கோடை விழா தொடக்கம்

நாளை ஜவ்வாது மலையில் தொடங்கவுள்ள 23 வது கோடை விழாவில் உதயநிதி உள்பட 3 அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Update: 2023-07-17 01:52 GMT

போக்குவரத்து பணிமனைகளில் ஓய்வு அறைகளை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நிகழாண்டுக்கான கோடை விழா ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. கலைஞா் நூற்றாண்டு கோடை விழா என்ற பெயரில் நடைபெறும், 23-ஆவது கோடை விழாவின் தொடக்க விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு, தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகிக்கிறாா். மாவட்ட ஆட்சியா் முருகேஷ் வரவேற்கிறாா்.

தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோடை விழாவை தொடங்கி வைத்து, புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையை திறந்துவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராமச்சந்திரன், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.

விழாவில், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா். கலை நிகழ்ச்சிகள்: தொடா்ந்து, இரவு 8 மணி வரை பள்ளி மாணவா்கள், தனியாா் அமைப்புகள் பங்கேற்று நடத்தும் பரதநாட்டியம், நையாண்டி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடைபெறுகிறது புதன்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறந்த அரங்குகள், பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகிறாா். விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

அமைச்சர் வேலு ஆய்வு

கோடை விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அமைக்கப்பட உள்ள அரங்குகள் ,நல திட்ட உதவிகள் குறித்து அமைச்சர் வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஜவ்வாது மலைக்கு வரும் வழிகள் அனைத்தும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் அமைக்க வேண்டும். போக்குவரத்து வசதி எந்த குறைபாடும் இருக்காமல் அனைத்தும் நல்ல முறையில் இருக்க வேண்டும் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் திருவண்ணாமலையில் போக்குவரத்து பணிமனைகளில் உணவு அருந்தும் கூடம், ஓய்வு அறைகள் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

திருவண்ணாமலை, தேனிமலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ரூ.18.60 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம் மற்றும் திருவண்ணாமலை 1, 2, 3 பணிமனைகளில் தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி.ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய உணவு அருந்தும் கூடம் மற்றும் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகளை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

விழாவில், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், ஜோதி, கிரி, தமிழ்நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளா் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியத்தின் உறுப்பினா் ஸ்ரீதரன், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் ராஜ்மோகன் மற்றும் அரசு அலுவலா்கள், தொமுச நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News