திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-06-17 01:50 GMT

பீடத்தில்  முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சிலை  நிறுவப்பட்டது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கிக்கால் பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க உள்ளனர்.அங்கு சிலை அமைப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், நீர் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என கூறி இருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து நீதிபதிகள் இவ்வழக்கை தள்ளுபடி செய்தனர். கருணாநிதி சிலை அமைப்பதற்கான தடை நீங்கியதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த இடத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீடம் அமைக்கப்பட்டு கிரேன் மூலம் பீடத்தில் கலைநயமிக்க முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது. இது பீடத்துடன் சேர்த்து சுமார் 30 அடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சிலை நிறுவப்பட்டு உள்ளதை நேற்று மாலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் புதியதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயிலையும் பார்வையிட்டார்.

ஆய்வின் போது முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன், டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். கருணாநிதி சிலையும், புதியதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயிலையும் திருவண்ணாமலைக்கு விரைவில் வர இருக்கும் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News