மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-27 08:25 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்  நடைபெற்றது.

முகாமில் அடையாள அட்டை பெறுவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாற்றுத் திறனாளிகள் அவர்களது காப்பாளர்களுடன் வந்தனர். விண்ணப்பதாரர்களை காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அடையாள அட்டை பெற அவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் இடங்களில் ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு கூட்டம் அலைமோதியது. முகாம் நடைபெறும் இடத்தில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போலீசார் அவர்களை வரிசையாக நிற்க தொடர்ந்து அறிவுறுத்தினர். மாவட்ட அளவில் இந்த முகாம் நடத்தப்படுவதால் அதிகளவிலான கூட்டம் ஒரே சமயத்தில் வருகிறது. இதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் வசதி வாய்ப்பற்றவர்கள். தொலைவில் இருந்தும் வந்துள்ளனர். எனவே மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தாலுகா வாரியாக அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News