பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை

Update: 2022-05-03 01:33 GMT

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்கள், டீ கப்கள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூசப்பட்டதாள், நீர் நிரப்ப பயன்படும் பைகள்,

பொட்டலங்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள், பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் குவளைகள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் மற்றும் வினியோகம் செய்யும் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க நகராட்சி, பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி பயன்பாடு மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்து விற்பனை மற்றும் வினியோகம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் போன்ற பெரிய வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரமும், மளிகைக் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற பெரிய வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரமும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.

பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன், சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News